
கரூரில். 41 அப்பாவி உயிர்கள் பறிபோன சம்பவத்திற்கு பின்னணியில் சகுனியாக இருந்து காய் நகர்த்தியவர் ஆதவ் அர்ஜூனா என்று ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புகார் கூறியுள்ளார்.

ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
விஜய்க்கு கடிதம்
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் அவர்களுக்கு அவர் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ” அன்புள்ள தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு, ஆதவ் அர்ஜூனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது முதல், உங்கள் நலன் விரும்பியாக நான் ஒரு உண்மையை உரக்க சொல்லிக்கொண்டே இருக்கிறேன். தவெகவுடன் எந்த கட்சியும் கூட்டணி வைக்க முடியாமல் முட்டுக்கட்டை போடுவது ஆதவ் அர்ஜூனாதான். இதற்கு பின்னால் அவருடைய சுயநலமும், அதிகார பசியும் மட்டுமே இருக்கிறது.

தவெக தலைவர் விஜய்.
ஸ்லிப்பர் செல்
திமுகவின் ஒரு முக்கிய புள்ளியால், உங்களையும் உங்கள் கட்சியையும் வேரோடு அழிப்பதற்காக அனுப்பப்பட்ட ஸ்லிப்பர் செல் (Sleeper Cell) தான் இந்த ஆதவ் அர்ஜூனா. தவெகவிற்கு கிடைக்க வேண்டிய மக்கள் ஆதரவைத் திசைமாற்றி, அதை எதிரணிக்குச் சாதகமாக்கும் சதிவேலைகளை அவர் மிகக் கச்சிதமாக செய்து வருகிறார்.

ஆதவ் அர்ஜூனா
கரூர் சம்பவத்தின் சகுனி
அதன் ஒரு பகுதிதான் கரூர் துயர சம்பவம். 41 அப்பாவி உயிர்கள் பறிபோன அந்த கோர சம்பவத்திற்கு பின்னணியில் ‘சகுனியாக’ இருந்து காய் நகர்த்தியவர் இவர் தான். சிபிஐ விசாரணையில் இவரது முகத்திரை கிழியும் என்பது உறுதி. அன்று செந்தில் பாலாஜியை திமுகவிற்கு அழைத்து சென்றதிலும் இவருக்கு பெரும் பங்கு உண்டு என்பதை இந்த இடத்தில் பதிவிட விரும்புகிறேன். செல்லும் இடமெல்லாம் தன்னைத் தானே தலைவனாக கட்டமைக்க முயல்வது இவரது வழக்கம். இதையுணர்ந்தே திருமாவளவன் அவர்கள் இவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து அப்புறப்படுத்தினார்.
அபாயம்
என் சொந்த அனுபவத்தில் சொல்கிறேன், எங்கள் குடும்பத்தைப் பிரிக்க முயன்றது போல, உங்கள் குடும்பத்தையும் அரசியலையும் சிதைக்க அவர் தயங்கமாட்டார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என துடிக்கும் உங்கள் பயணத்திற்கு, நான் ஒரு நலம் விரும்பியாகச் சொல்லிக்கொள்வது ஒன்றுதான், உங்கள் பாதை தெளிவாக இருக்கலாம். ஆனால், பயணிக்க வேண்டிய தடம் வழுக்கலாக இருக்கிறது. கூடவே இருந்து குழிபறிக்கும் துரோக சக்திகளை அடையாளம் காண தவறினால், உங்கள் வெற்றி பாதியிலேயே முடங்கிப்போகும் அபாயம் உண்டு. காலத்தே எடுக்கும் துணிச்சலான முடிவே கழகத்தின் எதிர்காலத்தை காக்கும். விழிப்புடன் இருங்கள், வெற்றிக்கான பாதையை சீர் செய்யுங்கள்” என்று கடிதத்தில் கூறியுள்ளார்.



