
திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வத்தை ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்.
அதிமுகவிற்கு இனி எதிர்காலம் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்ரவரி 27) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பேரறிஞர் அண்ணா தொடங்கிய, கலைஞர் கட்டிக்காத்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக்கொண்ட கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று அரசியலில் பேரறிஞர் அண்ணா காட்டிய வழியிலும், கலைஞர் காட்டிய வழியிலும் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஓர் அரசியல் பண்பாட்டோடு முதலமைச்சர் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்திக்கொண்டிருக்கிறார். அரசியலில் இன்று சர்வாதிகாரியாகவும், ஆணவப் போக்கோடும் நடந்துகொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெற முடியாத ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறார். அதிமுகவிற்கு இனி எதிர்காலம் இல்லை. பொதுவாகத் தேர்தல் காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். ஆனால், கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஆளுங்கட்சியாக இருந்து, மக்களின் நலன் கருதி அவர்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ள திட்டங்களைச் செயல்படுத்தி, அவற்றை மக்கள் தினந்தோறும் அனுபவிக்கும் வகையில் அர்ப்பணித்த ஆட்சி மு.க.ஸ்டாலினின் ஆட்சி” என்றார்.



