
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை பீளமேடு விமான நிலையம் பின்புறம், பிருந்தாவன் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் 2- ம் தேதி இரவு ஆண் நண்பருடன் 21 வயதான கல்லூரி மாணவி பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஆண் நண்பரை தாக்கிவிட்டு, மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான சதீஷ் என்ற கருப்பசாமி (30), கார்த்திக் என்ற காளீஸ்வரன் (21), மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த குணா என்ற தவசி (20) ஆகியோரை துடியலூர் அருகே போலீஸார் துப்பாக்கியல் சுட்டுப்பிடித்தனர். இதனை தொடர்ந்து கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அதன்படி 270 பக்கங்களில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. சாட்சிகள் விசாரணை கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கியது. அத்துடன் கல்லூரி மாணவி, மாணவியின் ஆண் நண்பர், மாணவியின் தாய், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலரும் சாட்சியம் அளித்தனர்.
அதன்பேரில் 21 நாட்களில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது. இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அதில் கைது செய்யப்பட்ட மூன்று பேருமே குற்றாவாளிகள் என தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் மூன்று பேருக்கான தண்டனை விவரம் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், கூட்டு பாலியல் என்ற பிரிவில் மூன்று பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.



