
போலீஸாரால் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரன்.
விளாத்திகுளம் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த தர்ம முனீஸ்வரன் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாயல்குடியைச் சேர்ந்த , தர்ம முனீஸ்வரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரை தூத்துக்குடி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி பிரீத்தா முன்பு நேற்று (மார்ச் 20) போலீஸார் ஆஜர்படுத்தினர். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிட்ட நீதிபதி, ஏப்ரல் 2-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் இருந்து போலீஸார், பலத்த பாதுகாப்புடன் தர்ம முனீஸ்வரனை அழைத்துச்சென்று பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், இன்று (மார்ச் 21) திடீரென தர்ம முனீஸ்வரனை மதுரை சிறைக்கு இடமாற்றம் செய்தனர். பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவர் பாளை சிறையில் இருந்து மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.



