சிலிண்டருக்கு ரூ.100 மானியம் திமுக அறிவிக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்!

2021-ல் அளித்த வாக்குறுதிபடி சிலிண்டருக்கு ரூ.100 மானியத்தை திமுக அறிவிக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் இன்று (மார்ச் 7) ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நாடு முழுவதும், கடந்த 10 ஆண்டுகளில், சமையல் எரிவாயு பயன்பாடு, 45 சதவீதம் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி கொண்டு வந்த உஜ்வாலா இலவச சமையல் எரிவாயு திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களால், கடந்த 10 ஆண்டுகளில், சமையல் எரிவாயு இணைப்பு, 14 கோடி வீடுகளில் இருந்து, சுமார் 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து, 33 கோடிக்கும் அதிகமான வீடுகளில் இன்று சமையல் எரிவாயு இணைப்பு உள்ளது.

பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக, சமையல் எரிவாயு இறக்குமதியும் அதிகரித்திருக்கிறது. மொத்த பயன்பாட்டில், இறக்குமதி மட்டுமே 60 சதவீதமாக உள்ளது. இதனால், சர்வதேச சந்தையில், போர் உள்ளிட்ட காரணங்களால் விலை உயர்வு ஏற்படும்போது, நமது நாட்டிலும் விலை உயர்வு தவிர்க்கவியலாமல் போகிறது.

திமுக தனது கடந்த 2021 தேர்தல் வாக்குறுதி எண் 503-ல், சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தது. ஆனால், ஐந்து ஆண்டுகளைக் கடந்தும், இன்னும் அதனை நிறைவேற்றவில்லை. பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுக, தற்போதாவது, சிலிண்டருக்கு ரூ.100 மானியத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *