ஜெயலலிதா பிறந்த நாளில் வீரசபதம் ஏற்போம்: எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி

தேர்தல் களத்திலே மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அயராது உழைப்போம் என்று ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கையை இன்று (பிப்ரவரி 24) வெளியிட்டுள்ளார். அதில், ” இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்த நாளில், அம்மாவின் நெடும் புகழை போற்றுகிறோம், அம்மா எங்களின் அடையாளம், ஏழைகளின் நம்பிக்கை, பெண்களின் தைரியம், தாய்மையின் உருவம். அதிகாரம் அவரை உயர்த்தவில்லை; மக்கள் மீது கொண்ட அன்பே அவரை உயர்த்தியது.

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு தீர்மானமும், வறுமை ஒழிப்புக்கான உலகளாவிய தரநிலையை நிறுவி ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியது. சோதனைகள் சூழ்ந்த தருணங்களிலும் அசைக்க முடியாத மனவலிமையுடன் தமிழகம் காக்க போராடிய தலைவர். மக்களுக்கான எங்கள் அனைத்து செயல்களிலும் உங்கள் புத்தகத்திலிருந்து ஒரு பகுதியை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் அம்மா. மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்று புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சொன்னதைப் போல, அதிமுக என்றென்றும் மக்கள் இயக்கமாகவே திகழ்கிறது.

‘எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்’ என்று நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் சூளுரைத்தார்கள். அந்த வெற்றி முழக்கத்தை, கொள்கைப் பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாள்..அதிமுக அரசின் சாதனைகளையெல்லாம், தி.மு.க. அரசு தங்களது சாதனைகளாக பொய்ப் பிரச்சாரம் செய்து வரும் தி.மு.க-வினரின் பிரச்சாரங்களை முறியடித்து, கழகத்தின் தலைமையிலான பொற்கால ஆட்சியில் செய்திட்ட சாதனைகளையெல்லாம் எடுத்துக் கூறி, தேர்தல் களத்திலே மாபெரும் வெற்றியைப் பெறுவதற்கு அயராது உழைப்போம்! அம்மாவின் உண்மைத் தொண்டர்களாகப் பணியாற்றுவோம்! என்று அம்மா அவர்களின் பிறந்த நாளில் வீரசபதம் ஏற்போம்.நமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும். வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ் வளர்க புரட்சித் தலைவி அம்மாவின் பெரும் புகழ். வெல்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்” என்று கூறியுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *