பாஜகவிற்கு வளைந்து கொடுக்கும் பழனிசாமி: முன்னாள் சபாநாயகர் தனபால் காட்டம்

முன்னாள் சபாநாயகர் தனபால்

பாஜக சொல்கிற அனைத்திற்கும் எடப்பாடி பழனிசாமி வளைந்து கொடுத்து செல்கிறார் என்று முன்னாள் சபாநாயகர் தனபால் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் சபாநாயகருமான தனபால், சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஜெயலலிதா மறைவுக்கு பின் ஆட்சியை காப்பாற்றி கொடுத்த எனக்கே சீட் வழங்கவில்லை. விருப்ப மனு அளித்தபோதும், போட்டியிட விருப்பமா, இல்லையா என்று கூட என்னிடம் யாரும் கேட்கவில்லை. அவிநாசி தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான எனக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவிநாசி தொகுதியை பாஜகவுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கிவிட்டு, எனக்கு சீட் வழங்காமல் புறக்கணித்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 18 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினார்கள். அப்படி போர்க்கொடி தூக்கிய 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்து ஆட்சியைக் காப்பாற்றி கொடுத்தேன். ஆனால், அப்படி ஆட்சியைக் காப்பாற்றி கொடுத்த போதிலும் தற்போது கட்சிக்குள் எனக்கு மரியாதை இல்லை. ராசிபுரம், அவிநாசி தனி தொகுதிகளை அதிமுகவுக்கு அழுத்தம் தந்து பாஜக பெற்றுள்ளது. பாஜக சொல்கிற அனைத்திற்கும் எடப்பாடி பழனிசாமி வளைந்து கொடுத்து செல்கிறார்” என்று தெரிவித்தார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *