
வெற்றிக் களிப்பில் இந்திய அணி.
ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நேற்று (மார்ச் 5) இரவு நடைபெற்றது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 253 ரன்கள் குவித்தது.
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார். அவர் 42 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார். ஷிவம் துபே 43 ரன்னும், இஷான் கிஷன் 39 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் வில் ஜாக்ஸ், ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே பெத்தேல் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் தனி ஆளாகப் போராடினார். வில் ஜாக்ஸ் 35 ரன்னும், ஜாஸ் பட்லர் 25 ரன்னும் எடுத்தனர். பெத்தேல் சதமடித்து 105 ரன்னில் ஆட்டமிழந்தார்.இறுதியில், இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இந்தியா இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப் போட்டி மார்ச் 8-ம் தேதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெறுகிறது.



