
அமெரிக்க தூதரகம் மீது டிரோன் தாக்குதல்.
லெபனானில் இஸ்ரேலிய ராணுவம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரான் முழுவதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் சரமாரியாக நடத்திய தாக்குதல்களில் பள்ளி மாணவிகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்தும் நீண்டதூர ஏவுகணைகள், டிரோன்களை வீசி ஈரான் கலங்கடித்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவங்களில் இதுவரை 6 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஈரான், அமெரிக்க போர் இன்று (மார்ச் 3) நான்காவது நாளாக எந்தவித பின்னடைவும் இன்றி தொடர்ந்து வருகிறது. அந்தவகையில் ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட நகரங்களை குறி வைத்து இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் அமெரிக்க தூதுரகம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரு டிரோன்கள் மூலம் நடந்த தாக்குதலில் கட்டடம் தீப்பிடித்ததுடன், கடுமையாக சேதமடைந்துள்ளதாக சவுதி அரேபிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள தங்களது ராணுவத் தளங்களுக்கு தேவையின்றி யாரும் செல்ல வேண்டாம் என அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க தூதுரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானின் தலைநகர் முழுவதும் அதிகாலை வரை வெடிச்சத்தங்கள் கேட்டன. விமானங்களின் சத்தம் மேல்நோக்கி கேட்டதாகவும், என்ன தாக்கப்பட்டது என்று உடனடியாக தெரியவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர். லெபனானில், ஈரான் ஆதரவு பெற்ற போராளிக் குழுவான ஹெஸ்பொல்லா மீது இஸ்ரேல் மேலும் தாக்குதல்களை நடத்தியது, மேலும் அதன் வீரர்கள் தெற்கு லெபனானில் செயல்படுவதாக கூறியது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் வெடிச்சத்தங்களுடன் புகையைக் காணவும் முடிந்தது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



