
காளியம்மாள்
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி காளியம்மாள், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள், கஜா புயல் ஏற்பட்ட போது நாம் தமிழர் கட்சியில் இணைந்த காளியம்மாள், அக்கட்சியின் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு வந்தார். இந்த நிலையில், வடசென்னை தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். இதையடுத்து 2021-ம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பூம்புகார் தொகுதியிலும், 2024-ம் ஆண்டு மயிலாடுதுறையிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும், காளியம்மாளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காளியம்மாளை பிசிறு என்று சீமான் பேசிய பேச்சு இணையதங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகினார். அவர் பாஜக, தவெக, அதிமுக, திமுக கட்சிகளில் சேர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. தவெகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை காளியம்மாள் இன்று (மார்ச் 13) சந்தித்தார் இதன் பின் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் காளியம்மாள் அதிமுகவில் இணைந்தார்.



