
கணினித் துறையில் வளர்ச்சியைப் பரவலாக்கி தமிழ்க் கனவைச் சாத்தியப்படுத்துவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 12) அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “திராவிட மாடலில் உருவான 2 டைட்டல் பார்க், 16 நியோ டைட்டல் பார்க் கணினித் துறையில் தமிழ்நாடு உயர்ந்திடத் தலைவர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் உருவானவை டைட்டல் பூங்காக்கள்.
கடந்த 2016-21 அதிமுக. ஆட்சியின் இறுதிக்காலத்தில் ஒரே ஒரு டைடல் பூங்காவுக்கு மட்டுமே அடிக்கல் நாட்டினர். நமது திராவிட மாடல் ஆட்சியில், அவர்கள் அடிக்கல் நாட்டிய பட்டாபிராம் டைடல் பூங்காவை விரைந்து முடித்துத் திறந்தது மட்டுமல்ல, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், காரைக்குடி ஆகிய ஏழு இடங்களில், சுமார் 4,200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நியோ டைட்டல் பார்க்குகளை நிறுவித் திறந்து வைத்துள்ளோம்.
இதுமட்டுமின்றி, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு இடங்களில், சுமார் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் டைட்டல் கார்க்குகளும், திருவண்ணாமலை, இராசிபுரம், நாகர்கோயில், திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய ஒன்பது இடங்களில், சுமார் 5,400 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நியோ டைட்டல் பார்க் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வளர்ச்சியைப் பரவலாக்கி, அனைத்து மாவட்டங்களையும்,. அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்! மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்துவோம். வெல்வோம் ஒன்றாக” என தெரிவித்துள்ளார்.



