
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
மார்ச் 2-ம் தேதி பவுர்ணமியன்று திருப்பரங்குன்ற மலையில் கிரிவலத்தில் மக்கள் பங்கேற்க முன்வர வேண்டும் என்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை இன்று (பிப்ரவரி 23) வெளியிட்டுள்ளார். அதில், “அனைவருக்கும் வணக்கம்! திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற வேண்டுமென நாம் தொடர்ந்து போராடி வருகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தப் போராட்டத்தின் அடுத்தகட்டமாக, சஷ்டியும் கிருத்திகையும் இணைந்து வரும் சிறப்பான நன்னாளான இன்று அதாவது பிப்ரவரி 23 ஆம் தேதியன்று, அருள்மிகு முருகப் பெருமானுக்காக ஆறு தீபங்கள் மற்றும் நாம் சார்ந்த பகுதியின் நன்மைக்காக ஒரு தீபம் என நம் வீடுகளில் மொத்தம் ஏழு விளக்குகளில் தீபமேற்றி, கந்தசஷ்டி கவசத்தை நாம் பாராயணம் செய்ய வேண்டுமென உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.
அதே போல வருகின்ற மார்ச் 2-ம் தேதி பவுர்ணமியன்று, மாலை வேளையில் திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் வருவதற்கும் மக்கள் முன்வர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கிறேன்!
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
வீர தண்டாயுதபாணிக்கு அரோகரா!
சஷ்டி பாடுவோம் தீபம் ஏற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.



