
பிளஸ் 2 தேர்வு
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 2) தொடங்குகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு நாளை முதல் துவங்குகிறது. இந்த ஆண்டு சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான தேதி கடந்த ஆண்டு நவம்பர் 5-ந் தேதி தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 26-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மதியம் 1.15 மணி வரை நடைபெற உள்ளன. பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் கடந்த பிப்ரவரி 9-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 14-ம் தேதி வரை நடத்தப்பட்டன.
தேர்வு நடைபெறும் போது வினாத்தாளில் பிழைகள் இருந்தாலோ அல்லது ஏதேனும் கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டிருந்தாலோ, அது குறித்து உடனடியாகப் புகார் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. தொடர்பு கொள்ள வேண்டிய புகார் எண்கள்: 9498383075, 9498383076. மின்னஞ்சல்: dgequestionpaperqueries@gmail.com. இந்த உதவி எண்கள் மூலம் ஆசிரியர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் வினாத்தாள் தொடர்பான தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கலாம். இதன் அடிப்படையில் மாணவர்களுக்குக் கருணை மதிப்பெண்கள் வழங்குவது குறித்து அதிகாரிகள் பரிசீலிப்பார்கள். அனைத்து பள்ளிகளிலும் தேர்வுக்கான ஏற்பாடுகள் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.



