புதுச்சேரியில் மட்டும் பிரதமர் மோடி இன்று ரோடு ஷோ… தமிழ்நாட்டில் எப்போது?

பிரதமர் மோடி

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி புதுச்சேரியில் இன்று பிரச்சாரம் செய்கிறார்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதியும், புதுச்சேரியில் ஏப்ரல் 9-ம் தேதியும் சட்டமன்றத் தேத்ரதல் நடைபெறுகிறது. இதனால் தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது.புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திக்கிறது. இந்த கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ், திமுக கூட்டணி மோதுகிறது.

இந்த நிலையில், புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று (ஏப்ரல் 3) பிரச்சாரம் செய்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனிவிமானம் பிரதமர் மோடி சென்னை வருகிறார். பிற்பகல் 12,30 மணிக்கு சென்னைக்கு வரும் பிரதமர் மோடி, மாலையில் அங்கிருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டரில் செல்கிறார்.

அங்கு சர்தார் வல்லபாய் படேல் சாலையில் உள்ள ஆதித்தி ஓட்டல் முதல் ராஜா தியேட்டர் வரை நடைபெறும் பிரம்மாண்ட ரோடு ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். புதுச்சேரியில் இன்று இரவு பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இரவே சென்னை திரும்புகிறார். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி தங்குகிறார்.

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடுவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதன் காரணமாக பிரதமர் மோடி சென்னையில் கலந்து கொள்ள இருந்த பாஜக நிர்வாகிகள் கூட்டம், பிரச்சாரக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், பாஜக தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதனால், தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி, புதுச்சேரியில் மட்டும் இன்று பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதனால் தமிழக பாஜக தலைவர்கள் கவலையில் உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக வேட்பாளர்கள் பட்டியல் தயாரான பிறகு சென்னையில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்வார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *