
தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டுப்படைகள் கடந்த 28-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாக இந்தியா முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வணிக ரீதியிலானே சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உணவக வகைகள் குறைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கே முன்னுரிமை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை என்று தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஒரு சிலிண்டர் 30 முதல் 40 நாள் வரை பயன்படுத்தலாம். அதேபோல், ஒரு சிலிண்டர் புக் செய்துவிட்டு அடுத்த சிலிண்டரை 20 நாள் கழித்துதான் புக் செய்ய முடியும். ஆனால், இன்று ஒரு சிலிண்டரை வாங்கிவிட்டு உடனே அடுத்த சிலிண்டரை புக் செய்தால் அது முடியாது. எங்கேயும் தட்டுப்பாடு கிடையாது.
ஓட்டல்களில் உணவு வகைகளை குறைத்ததற்கும், சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கும் சம்பந்தமே கிடையாது. ஓட்டல்களின் வெளியே எதிர்க்கட்சியினர் சிலிண்டர் தட்டுப்பாடு என எழுதிவைத்திருப்பார்கள். உலகில் போர் நிலவினாலும், இந்தியாவில் பொருளாதார பிரச்னை எதுவும் இல்லை. கியாஸ் தேவைப்பட்டால் அதை வழங்க நான் தயாராக இருக்கிறேன். நானும் ஒரு கியாஸ் டீலர் தான்” என்றார்..



