
தமிழக மீனவர்கள்
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் கடலுக்குள் சென்றாலே எல்லை தாண்டி விட்டதாக இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கிறது. அத்துடன் தமிழக மீனவர்களின் விசைப்படகுகளையும் அரசுடமையாக்கி வருகிறது. மறுபுறம் இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களை தாக்கி மீன், படகு உள்ளிட்டவற்றை பறித்துச் செல்லும் அடாவடி நடவடிக்கையும் தொடர்கிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 22 மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை இலங்கை கடற்படை சுற்றி வளைத்து கைது செய்தது. அத்துடன் தமிழக மீனவர்களின் 4 படகுகளையும் பறிமுதல் செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். சமீபத்தில் காரைக்காலை சேர்ந்த 2 5 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. அந்த சோகம் முடியும் முன்பே ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



