குண்டர் கூட்டத்தைக் கட்டி ஆளும் அறிவாலயம்… நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

நயினார் நாகேந்திரன்.

குண்டர் கூட்டத்தைக் கட்டி ஆளும் அறிவாலயம் என்று அரியணை ஏறியதோ அன்றிலிருந்து இடம், பொருள் குறித்த எவ்வித பயமுமின்றி முழு சுதந்திரத்துடன் குற்றவாளிகள் சுற்றித் திரிகின்றனர் என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவரது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை இன்று (மார்ச் 5) வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தையே உலுக்கிய நாங்குநேரி குரூரத்தின் ரத்தக் கறை காயும் முன்னரே, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூர் கிராமத்திற்குள் புகுந்த சிலர், கண்ணில் படுபவர்களை எல்லாம் அரிவாளால் வெட்டிக் கொலைவெறித் தாக்குதல் நடத்தும் காணொலி வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றது.

இக்கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் முழு மன மற்றும் உடல் நலத்துடன் விரைவாக குணமடைந்து வீடு திரும்ப இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். முன்பெல்லாம் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளிலோ அல்லது வெளிச்சம் நிறைந்த இடங்களிலோ பெரிதளவிலான குற்றச் சம்பவங்கள் நடைபெறாது என்ற நிலை இருந்தது. ஆனால், குண்டர் கூட்டத்தைக் கட்டி ஆளும் அறிவாலயம் என்று அரியணை ஏறியதோ அன்றிலிருந்து இடம், பொருள் குறித்த எவ்வித பயமுமின்றி முழு சுதந்திரத்துடன் குற்றவாளிகள் சுற்றித் திரிகின்றனர். ஒரு சிறிய வாக்குவாதத்திற்கு கூட கொலை செய்யுமளவிற்குக் குற்றவாளிகளுக்குத் துணிச்சல் மிகுந்துவிட்டது.

திமுக ஆட்சியின் அவலத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்களைக் கண்காணிப்பதிலேயே அரசு இயந்திரத்தின் முழு ஆற்றலையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செலவழித்துக் கொண்டிருந்தால், குற்றங்களும் குற்றவாளிகளும் கணக்கின்றி பெருகத் தானே செய்வார்கள்? இப்படிப்பட்ட ஒரு சுயநல அரசு தமிழகத்திற்குக் கிடைத்த சாபக்கேடு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *