துரோகிகளுக்கு அழிவு காலம் நெருங்கி விட்டது: சசிகலா எச்சரிக்கை!

சசிகலா

ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் திமுகவில் சேர்ந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது என்று சசிகலா கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார். இது தொடர்பாக புதிய கட்சி தொடங்கியுள்ள சசிகலா , தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக் கொள்வது ஒரு தவறான முடிவாகத் தான் அமைந்து உள்ளது.

துரோகிகள்
ஆனால். இந்த நிலைமைகளுக்கு எல்லாம் காரணம் ஒன்றே ஒன்று தான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும் தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னைச் சுற்றி உள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வரும் துரோகிகளின் அழிவு காலம் நெருங்கி விட்டது.

இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் வழி வந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *