
திருநள்ளாறு சனிபகவான் கோயில்,
இன்று சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறு சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்படுகின்றன.
வாக்கிய பஞ்சாங்க முறைப்படி இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனிப்பெயர்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று ( மார்ச் 6) சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் இடம்பெயர்கிறார். இதையொட்டி, காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிப்பெயர்ச்சி நேரத்தைக் கணக்கிட்டு சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இந்த விழாவில், சுமார் 4 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் நெரிசலின்றி தரிசனம் செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து சிறப்பு பேருந்துகளும், தெற்கு ரயில்வே மூலம் விழுப்புரத்திலிருந்து நாகப்பட்டினத்துக்கு இன்றும், நாளையும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து திருநள்ளாறு கோயிலுக்கு வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன அத்துடன் திருநள்ளாறு முழுவதும் 200 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் இன்று சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுமுறை அளித்து ஆட்சியர் இசிதா ராட்தி உத்தரவிட்டுள்ளார்.



