
திருச்சி மாணவியை ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி(22) தனது புராஜொக்ட் பணிக்காக சென்னைக்கு பிப்ரவரி 14-ம் தேதி வந்தார். அடையார் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி அந்த மாணவி பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி, இது தொடர்பாக கேட்ட போது, இந்த ஆபாசப் புகைப்படங்களை உனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி விடுவேன் என்று அந்த மர்மநபர் மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 9-ஆம் தேதி, மாணவி தனது புராஜொக்ட் பணிக்காக ஆன்லைன் செயலி மூலம் காரை புக்செய்து விட்டு காத்திருந்தார். அப்போது திடீரென ஒரு காரில் வந்த அடையாளம் தெரியாத கும்பல், அந்த மாணவியை காரில் ஏற்றி முகத்தில் மயக்க மருந்தை தெளித்துள்ளனர். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அந்த மாணவியை வேறொரு இடத்தில் அந்த கும்பல் காரில் இறக்கி விட்டுச் சென்றது. மயக்கம் தெளிந்த பிறகு தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அந்த மாணவி உணர்ந்துள்ளார். மார்ச் 10-ம் தேதி அடையாரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்றார். அதன் பின் மருத்துவமனையின் வெளியே வந்த அந்த மாணவியை மீண்டும் காரில் வந்த 3 பேர், மிரட்டல் விடுத்துள்ளனர். நடந்த சம்பவத்தை வெளியே சொன்னால், மார்பிங் செய்த ஆபாச புகைப்படங்களை உறவினர்களுக்கு அனுப்பி விடுவோம் என்று மிரட்டிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக அபிராமம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்துள்ளார். இதன் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார், சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் திருச்சி காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



