
வில்லிவாக்கத்தில் தவெக தலைவர் விஜய் இன்று மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், அந்த கட்சியின் தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து மாவட்டம் வாரியாக தனது தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகிறார். அவர் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி ஆகிய 2 இடங்களில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை வில்லிவாக்கம் பகுதியில் பிற்பகல் 12 மணி முதல் 1 மணி வரையிலும், தி.நகர் பகுதியில் மதியம் 2 மணி முதல் 3 மணி வரையிலும் பிரச்சாரம் செய்ய தவெக தலைவர் விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்திருந்தது. ஆனால், கொடுக்கப்பட்ட இந்தக் குறுகிய நேரத்திற்குள் பிரச்சாரத்தை முழுமையாக முடிக்க முடியாது என்று த.வெ.க தரப்பில் முடிவு செய்யப்பட்டது. விஜய் ஏற்கெனவே புதுச்சேரி, திருச்சி, பெரம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார்
இந்த நிலையில், சென்னையில் இன்று (ஏப்ரல் 6) நடைபெற இருந்த விஜய்யின் இரு முக்கிய பிரச்சார நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் தவெக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் கால அட்டவணை மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளே இந்த ரத்து முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.



