
தமிழகத்தில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பு எவ்வளவு என்ற விவரங்களை தமிழக அரசு கேட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருவதார்ல மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடல் காரணமாக எல்பிஜி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இந்தியன் ஆயில் வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நேற்று முதல் நிறுத்தியது.பெங்களூரு, கொல்கத்தா, மலப்புரம் போன்ற நகரங்களிலும் வணிக சிலிண்டர் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களில் ஓட்டல்கள் மூடும் அபாயம் உள்ளது. வணிக சிலிண்டர்கள் தற்போது மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன.
வீட்டு உபயோக சிலிண்டர்களை பொருத்தமட்டில் இந்தியன் ஆயில் மற்றும் மத்திய அரசு தரப்பில் தற்போது தட்டுப்பாடு இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் போர் பதற்றம் காரணமாக மக்கள் பதற்றத்தில் அதிக அளவு முன்பதிவு செய்ததால், இதைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரு சிலிண்டர் டெலிவரி பெற்ற பிறகு அடுத்த சிலிண்டரை 21 நாட்கள் கழித்து மட்டுமே புக் செய்ய முடியும்.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் வணிக, வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பு எவ்வளவு உள்ளது என்ற விவரங்களை தமிழக அரசு கேட்டுள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் தலைமையில் இன்று (மார்ச் 10) ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அப்போது இந்த கையிருப்பு விவரங்களை கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் சிலிண்டர் கையிருப்பு உள்ளதா, தட்டுப்பாடாக உள்ளதாக என்று தெரிய வரும்.



