
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. .தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கெனவே விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு முடித்துள்ளது. இதன் இறுதி கட்டமாக, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழுவினர் மேற்குவங்கத்தில் தங்களது ஆய்வை நிறைவு செய்துவிட்டு டெல்லி திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் முக்கிய ஆலோசனையில் இன்று (மார்ச் 11) ஈடுபடுகின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 5 மாநிலங்களிலும் எத்தனை கட்டங்களாகத் தேர்தலை நடத்துவது, பாதுகாப்புப் படையினரின் தேவை மற்றும் வாக்கு எண்ணிக்கை தேதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அது குறித்தும் இன்று தீவிரமாக விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் தேதிகள் குறித்த மிக முக்கியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது
தேர்தல் ஆணையத்தின் இந்த உயர்மட்ட ஆலோசனையைத் தொடர்ந்து, மார்ச் 15-ம் தேதி 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது என கூறப்படுகிறது. மேற்கு வங்கத்தில் 3 முதல் 4 கட்டங்களாகவும், அசாமில் இரு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது. மேலும் ஐந்து மாநில தேர்தலுடன் சில மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தலும் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகிறது.



