
கொழும்பில் உள்ள பிரேமதாசா விளையாட்டு மைதானம்
மழை பெய்யும் என்ற மிரட்டலுக்கு இடையே இந்தியா, பாகிஸ்தான் மோதும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது.
இந்தியா, பாகிஸ்தான் மோதும் டி20 கிரிக்கெட் போட்டியை காண ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியாவில் விளையாட மறுத்ததால் வங்கதேசம் நீக்கப்பட்டது. ஆனால், வங்கதேசத்தை ஆதரித்து டி20 உலகக் கோப்பை போட்டிகளை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் அறிவித்தது.
இதனையடுத்து, பாகிஸ்தான் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடும் எச்சரிக்கை விடுத்தது. இதன் பின்பே பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்க ஒப்புக் கொண்டது. இந்த நிலையில் இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா விளையாட்டு மைதானத்தில் பாகிஸ்தானை இன்று(பிப்ரவரி 15) இரவு இந்தியா எதிர்கொள்கிறது.
கொழும்பில் இன்று மழை பெய்ய வாய்ப்ப இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆடுகளம் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இலங்கை வானிலை ஆய்வுத் துறை, போட்டியை தாமதப்படுத்தவோ அல்லது குறுக்கிடவோ கூடிய மழை பெய்யும் என்று கணித்துள்ளது.அத்துடன் வங்காள விரிகுடாவில் உருவாகும் குறைந்த அழுத்தம் கொழும்பில் மழை பெய்யும் அபாயத்தை அதிகரிக்கும் என்று இலங்கை வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி என்பதால் கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



