
முதலமைச்சர் விஜய் பிறந்த நாளுக்கு பேனர் வைக்கக்கூடாது என அமைச்சர் என்.ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவருமான விஜய் பிறந்த நாள் ஜூன் 22-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் அமைச்சர்கள், தவெக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள்,. மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் அமைச்சர் என்.ஆனந்த் பேசுகையில்,” நமது முதலமைச்சரின் பிறந்தநாளை இதுவரை இல்லாத அளவிற்கு ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மருத்துவ முகாம் மற்றும் அன்னதானம் வழங்கியும் கொண்டாடுங்கள். பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் இடையூறு ஏற்படும் விதத்தில் தவெகவினர் செயல்படக் கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி பேனர்கள், கட்-அவுட் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.. முதலமைச்சர் விஜய் உத்தரவுக்கிணங்க பேனர் கலாச்சாரம் என்பது தவெகவில் இருக்கக்கூடாது” என்றார்.



