
அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்து வருகிறார்கள். அதன்படி இசக்கி சுப்பையா, மரகதம் குமாரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா ஆகிய 4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்துள்ளனர். மேலும் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினமா செய்துள்ளார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்எல்ஏ பதவியை இன்று (ஜூன் 29) ராஜினாமா செய்துள்ளார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை நேரில் சந்தித்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக கைப்பட எழுதிய கடிதத்தையும் வழங்கியுள்ளார். ,இதன் காரணமாக அதிமுக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 41 ஆக குறைந்துள்ளது. இதனால் திருச்சி கிழக்கு தொகுதியையும் சேர்த்து, தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், பேரவை செயலாளரிடம் அதிமுகவைச் சேர்ந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் இன்பதுரை எம்.பி ஆகியோர் புகார் மனு அளித்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் ஜூலை 2 -ம் தேதி தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமையில் தங்கள் ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது அக்கட்சியினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.



