
சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்பட 4 முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தவெகவில் இணைந்தனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, எம்.சி.சம்பத் ஆகியோர் தவெகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளின் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர்.
இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தவெகவில் இன்று (ஜூலை 2) இணைந்தனர். இதற்கான விழா மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இந்த இணைப்பு விழாவில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த், அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதிமுகவிலிருந்து நேற்று விலகுவதாக அறிவித்திருந்த திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, திருப்பூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ மான்ராஜ் தவெகவில் இன்று இணைந்தனர். இவர்களுடன் கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தவெகவில் இணைந்தனர். அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் விலகி தவெகவில் சேர்ந்து வருவதால், அக்கட்சி பெரும் சரிவை சந்தித்து வருகிறது.



