
தமிழ்நாட்டில் பொதுமக்கள் லஞ்சம் குறித்த புகார்களைத் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய், யாராவது லஞ்சம் கேட்டால் கொடுக்க முடியாது என்று தைரியமாக சொல்லுங்கள் என்று கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்தார். இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரின் நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் லஞ்ச ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுப் பலகைகளைப் பொதுமக்கள் எளிதில் பார்க்கும் வகையில் வைக்குமாறு அனைத்துத் துறைத் தலைவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (டிவிஏசி) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “தமிழ்நாட்டில் லஞ்சத்தை ஒழிக்க அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் லஞ்சம் குறித்த புகார்களை எவ்வித சிரமமுமின்றி தெரிவிக்கும் வகையில் 94981 80936 என்ற வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், dvac@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் புகார்களை அனுப்பலாம். இது தவிர, 044-22321090, 044-22321085, 044-22310989 மற்றும் 044-22342142 ஆகிய தொலைபேசி எண்கள் வழியாகவும் பொதுமக்கள் தங்களது லஞ்சப் புகார்களைப் பதிவு செய்யலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



