
கவிஞர் மனோந்திரா கவிதை வடிவில் எழுதும் காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் மதுரை இணையத்தில் நாளை தொடங்குகிறது.
தமிழ் ஊடக உலகில் மாற்று ஊடகமாக மலர்ந்துள்ள மதுரை செய்தி (maduraiseithi.in) இணைய தளம், செய்தி ஊடகம் என்ற தளத்தை தாண்டி இலக்கிய மணம் பரப்பும் வகையில் புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது. தமிழ் இலக்கிய உலகின் முன்னணி படைப்பாளிகளின் படைப்புகளைத் தாங்கி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தமிழகத்தின் முன்னணி படைப்பாளியான விருதுநகர் ம.மணிமாறன் எழுதும் ‘ஒரு கதை’ தொடர் மதுரை செய்தி இணையத்தில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்றும் வெளியாகி வருகிறது. இதில் தமிழ் சிறுகதை உலகில் தடம் பதித்த கதைகள் குறித்து எழுதி வருகிறார். அதே போல எழுத்தாளர் ச.சுப்பாராவ் எழுதும் ‘நினைவே சங்கீதம்’ என்ற இசைத்தொடரும் வெளியாகி வருகிறது. மதுரையின் பின்னணியில் எழுதப்படும் இந்த இசைத்தொடர் வாசகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தமிழ் திரைப்பட ஆய்வாளர் ப.கவிதா குமார் எழுதும் ‘பக்தியிசை பரப்பிய பாவலர்கள்’ என்ற தொடரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மதுரை செய்தி இணையத்தில் வெளியாகி வருகிறது. தமிழ் பக்திப் பாடல்கள் எழுதிய கவிஞர்கள் குறித்த அரிய தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் மிகச்சிறந்த மரபுக் கவிஞரான கவிஞர் மனோந்திரா எழுதிய ‘எளிதாக இலக்கணம் கற்கலாம்’ என்ற தொடர் வெளியாகி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது கவிஞர் மனோந்திரா, கவிதை வடிவில் மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை தொடராக எழுதுகிறார். இந்த தொடர் மதுரை செய்தி (maduraiseithi.in) இணைய தளத்தில் நாளை (ஜூலை 19) முதல் தொடங்குகிறது. நாளை முதல் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை கார்ல் மார்க்ஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு கவிதை வடிவில் வெளியாகிறது.



