
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீ்ட் எதிர்ப்பு,எஃப்.ஆர்.சி.ஏ மசோதவை திரும்ப பெற தனித்தீர்மானங்கள் இன்று தாக்கல் செய்யப்படுகின்றன.
நீட் தேர்வு முறை சமூக நீதி, சமத்துவம் மற்றும் மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரானது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிரான தனித்தீர்மானத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேரவையில் இன்று(ஆக.11) முன்மொழிகிறார்.
நீட் தேர்வு முறைகேட்டால் நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் நம்பிக்கையை இத்தேர்வு முறை முற்றிலும் இழந்துள்ளதால், இத்தேர்வு முறையை அகற்ற தேவையான சட்டத்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படவுள்ளது. இதன் மூலம், மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை மேற்கொள்ள இயலும் என்று இத்தீர்மானம் தெரிவிக்கிறது.
அதேபோல, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதாவை(எஃப்.ஆர்.சி.ஏ) திரும்ப பெற கோரும் தனித்தீர்மானத்தை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிகிறார். இந்த மசோதா தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சியையும், குறிப்பாக சிறுபான்மையினர் நடத்தும் கல்வி மற்றும் சமூகநல நிறுவனங்களின் செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும் எனவும், இம்மசோதாவை திரும்ப பெற்று மாநில அரசுகள், தொண்டு, மத, கல்வி, மருத்துவ மற்றும் சமூக அமைப்புகள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தவும் வலியுறுத்துகிறது.



