
இன்றைய முதலமை.ச்சர் விஜய், நாளைய பிரதமர் என்று தமிழக அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை வருங்கால பிரதமர் என்று அக்கட்சியினர் கூறி வருகின்றனர். ஆனாலும், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திதான் எதிர்க்கட்சிகளின் முகம். அவர்தான் பிரதமர் வேட்பாளர் என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் திட்டவட்டமாகக் கூறி வருகிறார். இந்த நிலையில், விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என்று தமிழக அமைச்சர் ஒருவர் பேசியுள்ளது மீண்டும் அந்த கூட்டணிக்குள் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று (ஆக.22) நடைபெற்றது. இந்த முகாமில் அமைச்சர்கள் கீர்த்தனா மற்றும் ஜெகதீஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
இந்த நிகழ்வில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசுகையில், “மாணவர்கள் நல்வழியில் சென்று ஊழலற்ற ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு காலமும் நம்முடைய ஆட்சி மட்டுமே இருக்கும். இன்றைய முதலமைச்சர், நாளைய பிரதமர் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. நாம் அனைவரும் ஒவ்வொரு நொடியும் அதனை நோக்கியே பயணிப்போம்” என்று தெரிவித்தார். இதன் மூலம் தவெகவிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் மீண்டும் உரசல் ஏற்பட்டுள்ளது.



