
திருவிழாவுக்காக பாட்டி ஊருக்கு வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, தனது பாட்டி ஊரில் நடந்த திருவிழாவை காண்பதற்காக ஆகஸ்ட் 30-ம் தேதி சென்றுள்ளார். அங்கு வந்த சந்தோஷ் (24) என்ற வாலிபர், சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது அடைக்கன்தேவன் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த்(20), அவரது நண்பர்களான 18 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் அங்கு வந்துள்ளனர்.அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து சந்தோஷை அங்கிருந்து அடித்து விரட்டியுள்ளனர்.
இதன் பின் அந்த சிறுமியை அரவிந்த் மற்றும் 3 சிறுவர்களும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், இதுபற்றி வெளியே சொல்லக்கூடாது என சிறுமியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். ஆனால், தனக்கு நடந்த வன்கொடுமையை பொறுக்க முடியாமல் அந்த சிறுமி, சேதுபாவாசத்திரம் காவல்நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார். இதன் பேரில் சந்தோஷ், அரவிந்த் மற்றும் 3 சிறுவர்கள் உள்பட 5 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



