
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தொழிலாளி உயிரிழந்த வழக்கில் அமைச்சர் வன்னி அரசின் சகோதரியை போலீஸார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் ‘சின்னத்தம்பி பைரோடெக்ஸ்’ என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை சிவகாசி பாறைப்பட்டியைச் சேர்ந்த ஜெயசக்தி என்பவருக்குச் சொந்தமானது. இவர், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுவின் உடன்பிறந்த சகோதரி ஆவார்.
இந்த ஆலையில் மாவட்ட வருவாய்த்துறையின் உரிமத்துடன் சிறு பட்டாசுகள் மற்றும் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பட்டாசு ஆலையில் நேற்று முன்தினம் மீனம்பட்டியைச் சேர்ந்த மாடசாமி (38) என்ற தொழிலாளி, வேதிப் பொருட்களைக் கலக்கும் அறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் மாடசாமி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் சண்முகராஜ் அளித்த புகாரின் பேரில், பட்டாசு ஆலை உரிமையாளர்களான தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுவின் சகோதரி ஜெயசக்தி, அவரது மகள் செல்வமாரி, அவரது கணவர் முரளீஸ்வரன், ஆலை மேலாளர் சூர்ய பிரகாஷ் ஆகிய நான்கு பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பட்டாசு ஆலை மேலாளர் சூர்யபிரகாஷை சாத்தூர் தாலுகா போலீஸார் கைது செய்ததுடன், தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.



