
குழந்தை
தேர்வு எழுதும் போது 10-ம் வகுப்பு மாணவி குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம், தார் மாவட்டத்தில் உள்ள பிதம்பூரை சேர்ந்த 14 வயது மாணவி, பத்தாம் வகுப்பு வாரியத் தேர்வு எழுதச் சென்றார். தேர்வு மையத்திற்கு வந்த மாணவி கடுமையான வயிற்று வலியால் கதற ஆரம்பித்தார். இதனால் தேர்வு எழுத வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த மாணவி வலியைத் தாங்க முடியாமல் தேர்வு மையத்தில் உள்ள கழிப்பறைக்குச் சென்றார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தேர்வுத்துறையினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மாணவியையும், அவரது குழந்தையையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக செக்டார் 1 காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சாந்தினி சிங்கர் கூறுகையில், ” இளைஞர் ஒருவர், பத்தாம் வகுப்பு மாணவியுடன் கடந்த ஒரு வருடமாக பழகியுள்ளார். இதன் காரணமாக மாணவி கர்ப்பமடைந்துள்ளார். ஆனால், இந்த விஷயத்தை தனது பெற்றோருக்குத் தெரியாமல் அந்த மாணவி மறைத்துள்ளார். குழந்தை பிறந்த பின்பே இந்த விஷயம் அவரது பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார்” என்று கூறினார். சமூக சுகாதார மையத்தின் மகளிர் மருத்துவ நிபுணர் பிரசாந்த் கஜ்வே கூறுகையில், ” மாணவியும், அவருக்குப் பிறந்த குழந்தையும் நலமுடன் உள்ளனர். அவர்கள் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளனர்” என்றார். பள்ளி மாணவி தேர்வு அறையிலேயே குழந்தையை பெற்ற சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சியையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.



