தூத்துக்குடி விசாரணைக் கைதி உயிரிழப்பு: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்

தூத்துக்குடியில் விசாரணை கைதி அருணாசலம் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,” தூத்துக்குடி நகரம் தென்பாகம் காவல்நிலையக் காவலர்களால் , சட்டவிரோதமாக மது வணிகம் செய்ததாக கைது செய்யப்பட்ட தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த அருணாசலம் என்ற இளைஞர் தலை உள்ளிட்ட காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. அருணாச்சலத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தூத்துக்குடி விசாரணைக் கைதி உயிரிழப்பு: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்

மது வணிகம் செய்ததாக கடந்த 17-ம் தேதி கைது செய்யப்பட்ட அருணாச்சலம் அன்று மாலையே தலை உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காவலர்கள் மூவர் சேர்ந்து கொண்டு தம்மை கொடூரமாகத் தாக்கியதாக அவர்கள் அளித்த காணொலி வாக்குமூலத்தையும் அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.

இவற்றை வைத்துப் பார்க்கும் போது அருணாச்சலம் குடும்பத்தினரின் குற்றச்சாட்டு உறுதியாவதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தூத்துக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட போது நன்றாக இருந்த அருணாச்சலம் மயங்கி விழுந்ததில் தான் அவருக்கு காயம் ஏற்பட்டதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.

ஏற்கெனவே நாகர்கோயில் கிளைச்சிறையில் சபரிநாதன் என்ற விசாரணைக் கைதி சிறைத்துறையினரால் தாக்கி கொல்லப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பதற்றம் தீரும் முன்பே இன்னொரு விசாரணைக் கைது மர்மமான முறையில் உயிரிழந்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை. கைதி அருணாசலத்தின் உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டப்படி தண்டிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *