
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையிட்டு வருகின்றனர்.
கடந்த திமுக ஆட்சியின் போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக இருந்தவர் கே.என்.நேரு. அப்போது நகராட்சி நிர்வாகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 800 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுக் கொண்டு மோசடி நடைபெற்றதாக ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை ஏற்கெனவே சோதனை நடத்தியது.
இந்த நிலையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள கே.என்.நேரு இல்லம், திருச்சி தில்லை நகரில் உள்ள கே.என்.நேரு இல்லம் மற்றும் சென்னை அபிராமபுரத்தில் உள்ள கே.என்.நேரு சகோதரரின் இல்லம் ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று( செப்டம்பர் 5) சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நான்கு வாகனங்களில் வந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் திருச்சி தில்லை நகர் இல்லத்துக்கு கே.என்.நேரு தற்போது வந்துள்ளார்.19 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



