
காட்டுத்தீ பரவி வருவதால் சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில் மாதம் தோறும் அமாவாசை தினத்தையொட்டி நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பாக ஆடி அமாவாசை நாளை (ஆக.12) கொண்டாடப்படவுள்ள நிலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆக.13-ம் தேதி வரை 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து ஆடி அமாவாசை மற்றும் பிரதோஷத்தையொட்டி நேற்று (ஆக.10) முதல் நாளே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் நேற்று இரவு நேரத்தில் வத்திராயிருப்பு தாணிப்பாறை மலைப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டு மலையின் கீழ் பகுதியை நோக்கி பரவி வருகிறது. காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவி வருகிறது. இந்த தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது தீ பரவும் சூழலில் பக்தர்கள் மலையேறினால் அவர்களின் பாதுகாப்பிற்கு ஆபத்து விளையும் என்பதை இன்று(ஆக.11) சதுரகிரி மலைக்கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



