பக்தியிசை பரப்பிய பாவலர்கள் 19…கோழிக்குளம் தாணு கோபால்

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் நடைபெறும் ஒரு விசேஷத்திற்காக அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். அந்த பேருந்து முழுவதும் மாலை அணிந்த முருக பக்தர்கள் கூட்டம். அதனால் பேருந்து முழுவதும் சந்தனம் கமழ்ந்தது. பேருந்தில் நிற்க இடமில்லை. அந்த அளவு கூட்டம். காவடி, பால்குடம், மாலைகள் என பேருந்து முழுவதும் ஒரு கோயிலுக்குள் நுழைந்து விட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. பேருந்து இருக்கைகள் முழுவதும் பக்தர்கள் அமர்ந்திருந்தனர். அந்த அளவு பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்து கொண்டிருந்தனர்.

காரைக்குடியில் இருந்து பழநிக்குச் செல்லும் சிறப்பு பேருந்து அது. காரைக்குடியில் இருந்த பழநிக்கு செல்லும் பக்தர்களுக்காக இயக்கப்படும் சிறப்பு பேருந்து என்பதால், பெரும்பாலான நிறுத்தங்களில் பேருந்து நிற்கவில்லை. திடீரென நான் நின்று கொண்டிருந்த இருக்கைக்கு அருகில் பேருந்தில் அமர்ந்திருந்த பெண், கைதட்டியபடி பாட ஆரம்பித்தார்.

காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா ஆட்டத்திலே
கண்டு எந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே – முருகா கூட்டத்திலே

பால் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா ஆட்டத்திலே
கண்டு எந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே – முருகா கூட்டத்திலே

சேவடியைக் காணவென்றே ஓடிவருவார் – அவர்
சிந்தையிலே உந்தனையே பாடிவருவார்
முருகா பாடிவருவார்

மச்சக் காவடிகள் ஆடிவரும் ஆட்டத்திலே – முருகா ஆட்டத்திலே
கண்டுஎந்தன் மெய்மறந்தேன் கூட்டத்திலே – முருகா கூட்டத்திலே…

பாடல் பாடிய பெண்ணுக்கு 35 வயது இருக்கும். நெற்றி நிறைய திருநீறு அணிந்திருந்தார். கேரளா நடிகை காவ்யா மாதவனைப் போல முக லட்சணம். ஆனால், அவர் குரல் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலைப்போல அவ்வளவு தூக்கலாக இருந்தது. சூலமங்கலம் சகோதரிகள் பாடிய காவடிகள் ஆடி வரும் ஆட்டத்திலே பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் அன்று தான் கேட்டேன். குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் சூலமங்கலம் சகோதரிகள் பாடிய இந்த பாடலை, ஒரு அரசு பேருந்து பயணத்தில் ஒரு பெண் பக்தையுடன் இணைந்து பக்தர்கள் பாடிக் கேட்டது புது அனுபவம் தான். பேருந்துகளில் ஒலிபரப்பு செய்யப்படும் பாடல்களுக்கு மத்தியில்,இப்படியான அனுபவம் புதிது தான்.

ஆனால், தமுஎகச மாநாட்டிற்கு மதுரையில் இருந்து சென்னைக்கு ரயிலில் சென்ற போது இப்படியான அனுபவம் எனக்கு உண்டு. மதுரை மாநகர் தமுஎகச தோழர்களுடன் சென்னை செல்லும் போது தோழர் ராயப்பனின் பாடல்கள் தான் எங்களுக்கு உற்சாகமே. புறநகரைச் சேர்ந்த கரிசல் கருணாநிதியும் இணைந்து கொண்டால், பாடல்களால் ரயில் நிரம்பி வழியும். அப்படியொரு அனுபவம் நத்தம் செல்லும் போது பழநி பேருந்தில் மீண்டும் எனக்குக் கிடைத்தது. நேயர் விருப்பமாக அந்த பெண்ணிடம், பக்தர்கள் மீண்டும் பாடலைப் பாடச் சொன்னார்கள். கைப்பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கடகடவென குடித்த அந்த பெண், அடுத்து என்ன பாடல் பாடப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எனக்கு மட்டுமல்ல, அந்த பேருந்தில் பயணம் செய்த அனைவருக்கும் இருந்தது.

ஒரு முகமாய் நின்று
பலமுகம் பார்த்தாலும்
திருமுகம் போல் ஆகுமா
முருகா உன்
அருமுகம் போல் ஆகுமா

இனிக்கும் மதுவை வைத்த
விழிகளிலே
இனிக்கும் மதுவை வைத்த
விழிகளிலே
அன்பு இன்பமெல்லாம் உதிக்கும்
கருணையிலே

என்று பாடலை மிக அற்புதமாக பாடினார். எனக்கு மட்டுமின்றி பேருந்தில் பயணித்த அனைவருக்கும் அந்த உணர்வு ஏற்பட்டிருக்கும். கர்நாடக இசையில் புகழ்பெற்ற சூலமங்கலம் சகோதரிகள் பாடிய அழகிய பாடலை, பேருந்து பயணி ஒருவர், இத்தனை ஸ்வர சுத்தத்துடன் பாடுகிறார் என்றால், அவர் சங்கீதம் படித்தவராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவர் பாடிய இந்த பாடலும் குன்றக்குடி வைத்தியநாதன் இசையமைத்தது தான். ஆனால், இந்த இரண்டு புகழ்பெற்ற பாடல்களையும் எழுதியவர் யார் என்று கேட்டால், பதில் இருக்காது.

கோழிக்குளம் தாணு கோபால்

இந்த பாடலை எழுதிய கவிஞர் பெயர் தாணு கோபால். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமமான கோழிக்குளத்தைச் சேர்ந்தவர். அதனால் கவிஞர் கோழிக்குளம் தாணு கோபால் என்று அழைக்கப்பட்டவர். குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் தாணு கோபால் புகழ்பெற்ற பல பாடல்களை இயற்றியுள்ளார். சூலமங்கலம் சகோதரிகள் பாடிய பல பாடல்களின் கவிஞர் இவர் என்பது பலர் அறியாதது. முருகன் பக்திப் பாடல்கள் என்றாலே சூலமங்கலம் சகோதரிகள் பெயர் தான் நினைவிற்கு வரும். அவ்வளவு பாடல்களை அவர்கள் இருவரும் பாடியுள்ளனர்.

தெய்வத்தமிழ் தெய்வமய்யா
அருள் செய்யும் திருமுருகய்யா….

சிரிக்கின்ற சிரிப்பெல்லாம் சிரிப்பாகுமா-உனைத்
தெரியாத உயிரெல்லாம் உயிராகுமா
பறிக்கின்ற மலரெல்லாம் மனம் வீசுமா-எனைப்
படைத்த பின் துணை செய்ய மனம் கூசுமா…

மயிலேறி விளையாடும் அழகோடு வா-கண்
மலரோடு வடிவேலின் துணையோடு வா-கண்
மயிலாடும் சிவஞானப் பழமாக வா-தமிழ்ப்
பண்போடு உறவாடும் கலையாக வா.

வேல் வேல் வெற்றிவேல்
கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
எங்கப்பனுக்கு அரோகரா
ஞான சுப்பனுக்கு அரோகரா
வேல் வேல் வீரவேல் வேல் வேல் வெற்றிவேல்
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா…

தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற முக்கியத் திருவிழாக்களின் போதும், உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில் திருவிழாக்களின் போதும் அறுபடை வீடுகளிலும் ஒலித்த இந்த சிறப்பு வாய்ந்த பாடலை தாணு கோபால் தான் எழுதினார். அழகு உணர்வு பொங்கும் வகையில் முருகனைத் துதித்து எழுதப்பட்ட இந்த பாடலின் இசையும், சூலமங்கலம் சகோதரிகளின் குரல்களும் கேட்போரை மயக்கச் செய்யும்.

பாடகி எம்.ஆர்.விஜயா

தமிழ் திரைத்துறையில் எத்தனையோ விஜயாக்கள் உள்ளனர். அதில் ஒருவர் எம்.ஆர்.விஜயா. ஏடி பூங்கொடி ஏனிந்த பார்வை என்ற மயக்க வைக்கும் குரலுக்குச் சொந்தக்காரர். கொல்கத்தாவின் பிறந்த இசைப்பேழை. வருவாண்டி தருவாண்டி மலையாண்டி, மதுரை அரசாளும் மீனாட்சி,தலைவா தவப்புதல்வா வருகவே.திங்கள் முடி சூடும் மலை தென்றல்,காணும் கலையெல்லாம் கண்காட்சி,அழகே தமிழே நீ வாழ்க,மாதென்னைப் படைத்தான் உனக்காக போன்ற புகழ் பெற்ற பாடல்களைப் பாடியவர். மேற்கு வங்காள மாநிலத்தில் அகில இந்திய வானொலி நடத்திய கர்நாடக இசைப் போட்டியில் ஜனாதிபதியின் விருதினைப் பெற்றவர் ஐந்து வயதிலே இசை பயின்ற எம்.ஆர்.விஜயா, திரைப்பாடல்கள் மட்டுமின்றி ஏராளமான பக்திப் பாடல்களைப் பாடியுள்ளார்.

குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் தாணு கோபால் எழுதிய பிள்ளைக்கெல்லாம் என்ற பக்திப் பாடலைப் பாடிய எம்.ஆர்.விஜயா, ஸ்ரீபதி இசையில் பாடிய இந்த பாடலும் தாணு கோபால் எழுதியது தான்.

கங்கையம்மா எங்கள் கங்கையம்மா….
தங்கவயல் காக்கும் உந்தன் செங்கையம்மா…
செங்கரும்பும் நெற்கதிரும்
நவதானியமும் செழிக்க
மும்மாரி நீ பொழியவே
கருணை செய்யம்மா

எம்.ஆர்.விஜயாவின் குரலில் இருக்கும் தனித்தன்மை கேட்போரை வசிகரிக்கும். எம்.ஆர்.விஜயா இசையமைத்து பல பாடல்களைப் பாடியுள்ளார் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்..

வா நீ வா ஐயப்பா நீ வா
புலி மீதிலே கலி தீர்க்கவே
வா நீ வா ஐயப்பா நீ வா…

என்ற பாடல் புகழ் பெற்றது. தாணு கோபால் எழுதிய பாடலிது. கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பட்டீஸ்வரம் புகழ்பெற்ற சாந்தநாயகி துர்க்கையம்மனை போற்றி எம்.ஆர்.விஜயா இசையமைத்து பாடிய ஆல்பம் ஜெய துர்க்கா.

இந்த ஆல்பத்தில் இடம் பெற்ற பட்டீஸ்வரம் தினம் பாடும் ஸ்வரம், ஓம் சக்தி சரணம்,நவராத்திரியின் நாயகியே, என்னிரண்டு கைகளாலே எண்ணி வந்த, அன்னை இவள் அருளுக்கு அளவே இல்லை, வருவாள் அன்னை, உன்னை நினைத்தவுடன், கேட்ட வரம் தரும் குருஷேத்திரம் பட்டீஸ்வரம், மங்கள ரூபிணி ஆகிய பாடல்கள் அனைத்தும் தாணு கோபால் எழுதியவை தான். கே.பத்மநாபன் இசையில் ஸ்ரீராம ஆஞ்சநேயர் என்ற இசை ஆல்பத்தில் இடம் பெற்ற பத்து பாடல்களை கோழிக்குளம் தாணு கோபால் எழுதியுள்ளார். எம்.ஆர்.விஜயா, பி.எஸ்.சசிரேகா, சி.பாலகிருஷ்ணன் ஆகியோர் பாடிய இந்த பாடல்கள் ஸ்ரீ ராமர் மற்றும் ஹனுமன் மீது பாடப்பட்ட பாடல்களாகும்.

டி.கே.எஸ்.கலைவாணன்

மருத்துவத்துறையில் நடக்கும் ஊழல் பற்றி எத்தனையோ படங்கள் வெளிவந்துள்ளன. தமிழில் 1981-ம் ஆண்டு சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மாதவி, ஜெய்சங்கர் நடித்த கர்ஜனை படம் முதல் முறையாக மருத்துவத்துறை மாஃபியா குறித்து பேசியது. இந்த படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் “வருவாய் அன்பே தருவாய் ஒன்று” என்ற பாடல் இன்றளவும் பலரின் விருப்பமான ஃபிளே லிஸ்டில் உள்ளது.

இந்த பாடலை எஸ்.ஜானகியுடன் இணைந்து பாடியவர் டி.கே.எஸ்.கலைவாணன்.நாடக மேதை டி.கே.சண்முகத்தின் புதல்வர். அதன் பின் அவருக்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவு ஃபிரேக் கொடுக்கும் வகையில் பாடல்கள் கிடைக்கவில்லை. இதன் பின் நாடக மரபைக் காக்கவும், தமிழ் இசையைக் காக்கவும் தனி நிகழ்வுகளில் டி.கே.எஸ்.கலைவாணன் தனது சகோதரர் டி.கே.எஸ்.புகழேந்தியுடன் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சிறந்த இசைஞானம் கொண்ட டி.கே.எஸ்.கலைவாணன் பல பக்தி இசை ஆல்பங்களுக்கு இசையமைத்துள்ளார்.

சாயிநாதன் திருநாமம்
அதில் சஞ்சலம் தீர்க்கும் ஒரு நாமம்…

தத்துவம் மலரும்
சத்தியம் மணக்கும்
சாயி சமாஜன் பூந்தோட்டம்
இதில் எத்தனை கோடி இதயம் உலாவும்
இதுவே பக்தியின் நீரோட்டம்

என்ற பஜனைப் பாடலுக்கு இசையமைத்து டி.கே.எஸ்.கலைவாணன் பாடியுள்ளார். இந்த பாடலை கோழிக்குளம் தாணு கோபால் எழுதினார். டி.கே.எஸ்.கலைவாணன் இசையமைத்து பாடிய ,

வேப்பமரத்து நிழலிலே
விளையாடும் வயதிலே…

என்ற பாடல் புகழ் பெற்றது. இந்த பாடலையும் எழுதியவர் தாணு கோபால் தான். சாய்பாபா புகழ் பாடும் பல பாடல்களை கோழிக்குளம் தாணு கோபால் எழுதியுள்ளார். ” யாரு ஸார், நத்தம் கேட்டது?” என்று பேருந்து நடத்துநர் சத்தம் போடவும் நினைவுகள் கலைந்து முருக பக்தர்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு கீழே இறங்கினேன்.
ப.கவிதா குமார் (நினைவுகள் சுழலும்)

இந்த தொடரைப் படிக்க https://maduraiseithi.in/?s=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88 இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.

இப்போதே பகிருங்கள்

One comment

  1. சார்…வணக்கம்…
    தமிழ் பக்தியிசையின் பொற்காலத்தில் ஒலித்த எத்தனையோ புகழ்பெற்ற பாடல்களின் பின்னால் இருந்தும், இன்று பலரால் அறியப்படாமல் போன கவிஞர்களைத் தேடிக் கண்டறிந்து, அவர்களின் படைப்புகளையும் வரலாற்றையும் புதிய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி வரும் “பக்தியிசை பரப்பிய பாவலர்கள்” தொடர் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இந்த
    19-வது தொடரில் (இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை) கோழிக்குளம் தாணு கோபால் அவர்களின் பாடல்களையும், அவரது இசைப் பயணத்தையும் மிக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்.

    குறிப்பாக ஒரு பேருந்துப் பயணத்தில் ஒலித்த முருகன் பாடல்களிலிருந்து நினைவுகளை விரித்து, அதன் படைப்பாளியை நோக்கி வாசகர்களை அழைத்துச் செல்லும் உங்கள் எழுத்து நடை கட்டுரையை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது.
    நாம் பல ஆண்டுகளாகக் கேட்டு ரசித்த பாடல்களை எழுதிய மறக்கப்பட்ட படைப்பாளிகளின் பெயர்களையும் பங்களிப்பையும் மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டு வருவது ஒரு சிறந்த ஆவணப் பணி.

    இது வெறும் பக்தியிசைக் கட்டுரைத் தொடர் மட்டுமல்ல; தமிழ் இசை வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை மீட்டெடுக்கும் அரிய முயற்சி.
    இந்த அருமையான தொடர் இன்னும் பல பாவலர்களின் வரலாற்றையும் படைப்புகளையும் வெளிக்கொண்டு வரட்டும்.
    உங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *