
ஊழலுக்கு எதிராக வெளிப்படையாக பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு பட்டய பொறியாளர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் மு.மாரிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஆட்சிகள் மாறும் போது எல்லாம் நெடுஞ்சாலைத்துறையில் எந்த மாற்றமும் இல்லாமல் நிர்வாக நடைமுறைகள் இருந்து வந்துள்ளது. ஆனால், முதன்முறையாக கடந்த 25,05.2026-ல் சென்னையில் நடைபெற்ற உயர்மட்ட பொறியாளர்கள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று பேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்கள், வெளிப்படையாக ஊழலுக்கு எதிராக பேசியது நல்ல மாற்றத்திற்கான முயற்சி. அதற்கு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் சார்பாக பாராட்டுகள்.
பொதுவாக கடந்த காலத்தில் பணம் மேல்மட்டத்தில் உள்ள உயர்மட்ட பொறியாளர்களால் கேட்கப்படும் அதன் காரணமாக கீழ்மட்டத்தில் உள்ள பொறியாளர்கள் மாதம் தோறும் பொதுப்பணம் என ரூ.50,000 முதல் 100000 வரை கொடுக்க வேண்டிய கட்டாய நிலை இருந்து வந்துள்ளது. இந்த நிலை மாறாதா என பொறியாளர் மத்தியில் இருந்தது. தற்போது அமைச்சர்கள் அவர்கள் நடத்திய கூட்டத்திற்குப் பிறகு உயர்மட்ட பொறியாளர்கள் கீழ்மட்ட பொறியாளர்களை தொடர்பு கொண்டு இனி எந்த பணமும் நீங்கள் மேலே கொடுக்க வேண்டாம் என்று நிர்வாகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்கம் சார்பாக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் வரும் காலங்களில் இதுபோன்ற நேர்மையான நடவடிக்கைகளும் பொறியாளர்கள் பணி மாறுதல்களும் நேர்மையாக நடைபெறும் என்று நம்புகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.



