ரூ.75,000 வரையிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு

ரூபாய் 75,000 வரை பயிர்க்கடன் பெற்றுள்ள விவசாயிகளுக்கு முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110- ன் கீழ் விவசாயிகளுக்கான அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் இன்று (ஆக.17) வெளியிட்டுள்ளார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக மக்கள் நம் உயிர் என்றால் தமிழக விவசாயிகள் நம் உயிர் நாடி. உலகில் சாதி, மதம், இனம், மொழி என அனைத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நடைபெறும் தொழில் என்றால் அது விவசாய தொழில் மட்டுமே. எந்த நாடு உழவுத்தொழிலை மதித்து விவசாயிகளுக்கு உரிய பாதுகாப்பையும், ஆதரவையும் வழங்குகிறதோ அந்த நாட்டில் தான் மக்கள் வளமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.

தமிழக வெற்றிக் கழக அரசு, பல்வேறு நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றாலும் பதவியேற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க கடந்த மே 25- ம் தேதி குறு, சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் ரூபாய் 50,000 வரையிலான கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் விவசாயிகளின் நலனை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மட்டும் கருத்தில் கொண்டு குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு ரூபாய் 50,000 வரை முழு தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டதை உயர்த்தி ரூபாய் 75,000 வரை கடன் பெற்றவர்களுக்கு முழு தொகையையும், ரூபாய் 75,000- க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு ரூபாய் 35,000 தள்ளுபடி செய்ய அறிவிக்கப்பட்டு அதன் மூலம் 14.44 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 5,932.23 கோடி அளவிலான கூட்டுறவுப் பயிர்க்கடன் தள்ளுபடி செய்து கடந்த ஜூன் 19- ம் தேதி ஆணையிடப்பட்டது.

இதில் ஜூலை 31-ம் தேதி வரை ரூபாய் 5,267 கோடி விடுவிக்கப்பட்டு 13.34 லட்சம் விவசாயிகளின் கணக்கில் வரவும் வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள விவசாய சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள், பயிர்க்கடன் தள்ளுபடியை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துக் கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து, ஆகஸ்ட் 7 ம் தேதி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சர்கள், துறைச் செயலாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அவர்களின் கோரிக்கைகள் விரிவாகப் பரிசீலிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும்,அரசால் கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்தவேண்டிய தொகை 4-5 ஆண்டு கால இடைவெளியில் செலுத்தப்பட்டு வந்துள்ளது.2021-ம் ஆண்டில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை, 2021 முதல் 2026 வரையான காலத்தில் அரசால் 12 தவணைகளாக கூட்டுறவு வங்கிகளுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் கால அவகாசம் நமது அரசுக்குத் தற்போது இல்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் கடந்த 2025- ம் தேதி நவம்பர் 28- ம் தேதியிட்ட கடிதத்தில், அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான செயல்பாட்டு நடைமுறைகளின்படி பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத்தொகையையும், அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் கூட்டுறவு வங்கிகளுக்கு முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிமுறை நடைமுறையில் வந்துள்ளது. இந்த வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் நிதிநிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்குப் பின்வரும் கூடுதல் தள்ளுபடியை வழங்கிட அரசு முடிவு செய்துள்ளது.

ரூபாய் 75,000 வரை பெற்றுள்ள பயிர்க்கடன்கள் 100% முழுமையாகவும், ரூபாய் 75,000 முதல் ரூபாய் 1 லட்சம் வரை பெற்றுள்ள பயிர்க் கடன்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 75,000 வரையும், ரூபாய் 1 லட்சத்திற்கும் மேல் பெறப்பட்டுள்ள பயிர்க்கடன்களுக்கு அதிகபட்சமாக ரூபாய் 35,000 வரையும் தள்ளுபடி வழங்கப்படும். இதன்மூலம், ரூபாய் 75,000 முதல் ரூபாய் 1 லட்சம் வரை பயிர்க்கடன் பெற்றுள்ள 2,38,264 விவசாயிகளுக்கு தலா ரூபாய் 75,000 வரை தள்ளுபடி வழங்கப்படும்.

இதனால் ஏற்கெனவே பெற்ற தள்ளுபடி தொகைக்கு மேலாக ரூபாய் 40,000 வரை கூடுதல் தள்ளுபடி பெறும் வாய்ப்பு ஏற்படும். இந்த கூடுதல் பயிர்க்கடன் தள்ளுபடியால் அரசுக்கு சுமார் ரூபாய் 953.06 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். இருந்தாலும், தமிழக விவசாயிகளின் நலனில் தான் நமது நலன் உள்ளது என்று கருதி சுமார் 13.34 லட்சம் விவசாயிகளுக்கு, மொத்தமாக 6,220 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடியை இந்த அரசு வழங்குகிறது ” என்று தெரிவித்தார்..

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *