ஏற்றம் தரும் அன்னை சென்னை: மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இருப்போர், இலார் என எல்லோரையும் அரவணைத்து ஏற்றம் தரும் அன்னையான சென்னைக்கு வயது 387.

101 அடி பாலத்தின் மேல் நின்று குனிந்து பார்த்தாலும், விமானத்தில் அமர்ந்துகொண்டு எட்டிப் பார்த்தாலும், தரையில் இருந்து பார்த்தாலும், சாலைக்கு அடியில் ஓடும் வடிகால்களைப் பார்த்தாலும் சென்னையில் எங்கும் எங்கெங்கும் திமுகவின் சாதனைகள் இருக்கும்; திமுகவின் சாதனைகள் மட்டும்தான் இருக்கும்.

மேம்பாலங்கள், கோட்டங்கள், பூங்காக்கள், நவீன பேருந்து முனையங்கள், மெட்ரோ ரயில், IT Park, FinTech Tower, வானுயர்ந்து நிற்கும் மருத்துவமனை – நூலகக் கட்டடங்கள் எனக் கடந்த 60 ஆண்டுகாலச் சென்னை வரலாற்றை இரசித்து இரசித்துச் செதுக்கியவர்கள் நாங்கள். சட்டமன்ற உறுப்பினராக, மாநகரத் தந்தையாக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக என அத்தனை நிலைகளிலும் சென்னையை வளர்த்தெடுத்தவன் என்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். தருமமிகு அன்புமிகு சென்னை வாழ்க” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *