
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் எதிர்க்கட்சி வரிசையில் இன்று அமர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை தவெக ஏற்காவிட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று காங்கிரஸ் கட்சியின் அமைச்சர் ராஜேஷ் குமார் எச்சரித்திருந்தார். இந்த நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான தாரகை கத்பட் இதுவரை ஆளும்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தார். ஆனால் இன்று (ஆகஸ்ட் 31) சட்டமன்ற குழு தலைவர் என்ற அடிப்படையில், எதிர்கட்சியினர் அமரும் முன்வரிசையில், சவுமியா அன்புமணிக்கு அருகே இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டு அமர்ந்துள்ளார்.
எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் எம்எல்ஏ அமர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “சட்டமன்றத்தில் இருக்கை மாற்றம் என்பது வழக்கமான நிர்வாக நடைமுறையின் ஒரு பகுதி தான். சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவர் நியமிக்கப்பட்டதன் காரணமாக இருக்கை மாற்றப்பட்டுள்ளது.
மேலும், கூட்டணிக் கட்சிகளின் சட்டமன்றக் கட்சித் தலைவர்களின் அமர்வை கருத்தில் கொண்டு, காங்கிரஸ் கட்சியின் இரண்டு அமைச்சர்களும் முதல் வரிசையில் அமர்ந்துள்ளனர். பேரவைத் தலைவர் இந்த மாற்றத்தை செய்திருப்பது வரவேற்கத்தக்கது. ஒரு வழக்கமான இருக்கை மாற்றத்தை வைத்து, இல்லாத அரசியல் அர்த்தங்களை கற்பனை செய்து பரப்ப வேண்டாம். செய்தியை செய்தியாகவே பாருங்கள்; அரசியலை கற்பனையாக உருவாக்க வேண்டாம்” என கூறியுள்ளார்.



