
தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்குத் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு போலீஸார் சம்மன் அளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை தொகுதி தவெக ச்ட்டமன்ற உறுப்பினர் இளையராஜா, சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் புகார் மனு அளித்தார். அதில், அவர் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க கோரி தன்னிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்டதாக கூறியிருந்தார். இந்த புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீஸார், ஐபிடிஎஸ். என்ற தேர்தல் கருத்து கணிப்பு நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு, சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன், பெசன்ட் நகரைச் சேர்ந்த நரேஷ், கரூரைச் சேர்ந்த ரமேஷ், கார்த்தி, சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த செல்வன் உள்ளிட்ட 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்களில் சிலர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக சென்னை போலீஸார் இன்று (ஜூலை 4) சம்மன் அளித்தனர். அந்த சம்மனில் ஜூலை 6-ம் தேதி ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



