கோமாளி சர்க்கார்… தவெக அரசு மீது உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்

இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெள்யிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

கோவையில் போதை கும்பலைத் தட்டிக் கேட்டதற்காக கல்லூரி மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட, அடுத்த சில தினங்களில் சென்னையிலும் இத்தகைய கொடூரம் நடந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் இந்த அரசு எந்த அளவுக்கு தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதற்கு தமிழ்நாட்டிலே தொடரும் கொலைகளே சாட்சி. போதைப் பொருள் பயன்படுத்துவதையோ – விற்பதையோ அம்பலப்படுத்தினால், அவர்கள் கொலை செய்யப்படுவார்கள் என்பது, ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்படும் எச்சரிக்கை. நிர்வாகத்திறனற்ற இந்த கோமாளி சர்க்காரை கண்டு சமூக விரோதிகளுக்குத் துளியும் பயமில்லை என்பதே இதற்கு காரணம்.

குறிப்பாக, பள்ளிகளில், கல்லூரிகளில் இத்தகைய சம்பவங்கள் நடப்பதை அரசு கண்டும் காணாமல் வாயை மூடிக் கொண்டு இருப்பது வெட்கக்கேடு. மாணவர் தனுஷ் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். இத்தகைய தொடர் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி கல்லூரிகளில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கிறதா? அதற்கு என்ன காரணம்? இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை எல்லாம் உரிய முறையில் விசாரித்து இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வன்முறை எதற்கும் தீர்வல்ல என்பதை உணர்த்தும் வகையில் மாணவர்கள் மத்தியில் கவுன்சலிங் வழங்கி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *