
80–வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்தார்.
இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் இன்று (ஆக.15) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பங்கேற்ற முதலமைச்சர் விஜய்யை காவல்துறையினர் இருசக்கர வாகன பேரணியாக கோட்டைக்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு, கோட்டையில் காவல் துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை திறந்தவெளி வாகனத்தில் சென்று முதலமைச்சர் விஜய் கண்டுகளித்தார்.
இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் விஜய் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், “நம்ம தாய்நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று இன்றைக்கும் வாழ்ந்து வரும் தியாகிகள், ஓய்வூதியம் பெற்று வரும் தியாகிகளின் வாரிசுகள், காவல்துறை அதிகாரிகள், முப்படை வீரர்கள், சிறப்பு விருந்தினர்கள், பொதுமக்கள், என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாடு மக்கள் என அனைவருக்கும் என் சுதந்திர தின வாழ்த்துகள்.
நம்மை அடிமை மாதிரி வைத்திருப்பது தெரிந்தால், மக்களிடம் தானாகவே ஒற்றுமை வரும், எல்லோரும் ஒரே மாதிரி யோசித்து ஒன்று சேருவார்கள், அப்படி ஒன்றுசேரும் இடத்தில்தான் சாதி, மதம், இனம் உடைந்து நொறுங்கும், அப்படி உடைந்து கிடைப்பதுதான் உண்மையான சுதந்திரம். தமிழ்நாட்டை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமான ஒன்றுதான். அதை நோக்கிதான் நம் அரசு செயல்படுகிறது. கோட்டையில் கொடியேற்ற வைத்து என்ன இங்கு பேச வைத்திருக்கும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சொந்தங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், ஜென்-சி இளம்படை சிங்க தோழர்களுக்கும் என் மனம்மார்ந்த நன்றி.
தமிழ்நாடு என்று வரும்போது, மாநில உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலும் சரி, தமிழ்நாட்டுக்கு எதிரான கொள்கை முடிவுகளிலும் சரி, நம்ம தவெக அரசு எப்போதும் எதிர்க்கும்” என்றார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் அறிவித்த புதிய திட்டங்களை அறிவித்தார்.
அதன்படி முன்னாள் படைவீரர்களின் 2 மகள்களுக்கான திருமண நிதியுதவி: ரூ.25,000 லிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்படும். மாற்றுத்திறனாளி முன்னாள் படைவீரர்களுக்கான மாதாந்திர உதவி: ரூ.5,000 லிருந்து ரூ.7,000ஆக உயர்த்தப்படும். விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.23,000 ஆகவும், விடுதலைப் போராட்ட வீரர்களின் குடும்ப ஓய்வூதியம் ரூ.12,500 ஆகவும் உயர்த்தப்படும். கட்டபொம்மன், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி, மருது , வ.உ.சி. வழித்தோன்றல்களுக்கான சிறப்பு ஓய்வூதியம்: ரூ.11,500 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.



