
ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியில், அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளது.
நியூஜெர்சியில் உள்ள புகழ்பெற்ற மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் இறுதிப்போட்டியில், நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவும், முன்னாள் சாம்பியனான ஸ்பெயினும் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் வழக்கமான 90 நிமிட ஆட்ட நேர முடிவில் இரு அணிகளாலும் எந்தவொரு கோலையும் அடிக்க முடியவில்லை.
இதன் காரணமாக ஆட்டம் கூடுதல் வழங்கப்பட்டது.. அதில், ஆட்டத்தின் 106வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் மாற்று வீரர் ஃபெர்ரான் டோரஸ் கோலை அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆனால், இறுதிவரை போராடிய அர்ஜென்டினா அணியால், எதிரணியின் பலமான டிஃபென்ஸைத் தகர்த்து கோல் எதுவும் அடிக்க முடியாமல் போனதால் தோல்வியைத் தழுவியது. குறிப்பாக, இப்போட்டியின் போது அர்ஜென்டினா வீரர் என்சோ பெர்னாண்டஸ் ரெட் கார்டு பெற்று வெளியேற்றப்பட்டதால், இறுதியில் அர்ஜென்டினா அணி 10 வீரர்களுடன் மட்டுமே விளையாட வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.
இந்தத் தோல்வியின் மூலம், தொடர்ந்து இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை கைப்ற்ற வேண்டும் என்ற லியோனல் மெஸ்ஸியின் கனவு தகர்ந்தது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியின் மூலம் பல புதிய உலக சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. இப்போட்டியில் வென்றதன் மூலம், சர்வதேச கால்பந்து வரலாற்றில் தொடர்ந்து 38 போட்டிகளில் தோல்வியடையாத புதிய உலக சாதனையை ஸ்பெயின் அணி படைத்துள்ளது. இதற்கு முன், இத்தாலி தேசிய அணி தொடர்ந்து 37 போட்டிகளில் தோல்வியடையாமல் இருந்ததே உலக சாதனையாக இருந்தது. தற்சமயம் அந்த வரலாற்றுச் சாதனையை ஸ்பெயின் அணி முறியடித்து அசத்தியுள்ளது
இந்த போட்டியின் மூலம் அர்ஜென்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, உலகக் கோப்பை வரலாற்றில் மூன்று இறுதிப்போட்டிகளில் (2014, 2022 மற்றும் 2026) விளையாடிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார். இதுதவிர, உலகக் கோப்பை வரலாற்றிலேயே இறுதிப்போட்டியில் களமிறங்கிய மிக வயதான அவுட்ஃபீல்டு வீரர் என்ற சாதனையையும் மெஸ்ஸி (39 வயது 25 நாட்கள்) தன்வசப்படுத்தியுள்ளார்.
இந்தத் தொடர் முழுவதும் எதிரணிகளுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஸ்பெயின் அணியின் டிஃபென்ஸ், ஒட்டுமொத்த தொடரிலும் சேர்த்து ஒரே ஒரு கோலை மட்டுமே எதிரணிக்கு விட்டுக்கொடுத்துள்ளது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றிலேயே, மிகக் குறைந்த கோல்களை மட்டுமே விட்டுக்கொடுத்துச் சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற வரலாற்றுச் சாதனையை ஸ்பெயின் அணி படைத்துள்ளது
இந்த நிலையில், உலகக்கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.அதன்படி ஸ்பெயின் அணிக்கு இந்திய மதிப்பில் 4,814 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடம் பிடித்த அர்ஜென்டினா அணிக்கு ( 33 மில்லியன் டாலர்கள்) இந்திய மதிப்பில் 3,177 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.



