
தவெக தலைவர் நடிகர் விஜய்
தொலைக்காட்சி விவாதங்களில் அனுமதி பெறாமல் தவெக நிர்வாகிகள் பங்கேற்கக்கூடாது என்று விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தொலைக்காட்சி மற்றும் டியூப் விவாதங்களில் தவெக நிர்வாகிகள் பலர் பங்கேற்கின்றனர். நெறியாளர்களோ, கட்சியினரோ கேட்கும் கேள்விகளுக்கு தவெக நிர்வாகிகள் சிலர் உரிய பதிலளிக்காமல் சமாளிப்புகளை செய்து வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், தவெக நிர்வாகிகள் அனுமதி பெறாமல் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கவும், பேட்டி தரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில், “ தலைமைக் கழகத்தின் அனுமதியின்றி, கழக மாநில மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், தோழர்கள் யாரும் எவ்வித ஊடக விவாதங்களிலும் பங்கேற்கக் கூடாது.
மேலும் பொதுவெளியில் நடத்தப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விவாதங்கள், நேரடிப் பேட்டிகள் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்குவது உள்ளிட்டவை குறித்து, தலைமைக் கழகத்தின் முன்அனுமதி கண்டிப்பாகப் பெற வேண்டும். முன்அனுமதி பெறாமல், எந்த விதமான மாநில அல்லது தேசிய ஊடகத் தளங்களிலும், விவாதங்களிலும் பங்கேற்பதோ அல்லது நேர்காணல் வழங்குவதோ கூடாது என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



