கவிதை… பற்றி எரியும் எண்ணெய்க் கிணறுகளில்

மினாப் நகரில் அழிக்கப்பட்ட
160 சிறுமிகளின்
வெண் துணிபோர்த்திய
படங்கள் எங்கெங்கும் காணப்படுகின்றன

சில நாட்களுக்கு முன்புதான்
எப்ஸ்டீன் பைல்களில் காணப்பட்ட
‘லோலிடா’ சிறுமியரின்
அழிவைப் பற்றிய
புகைப்படங்களைப் பார்த்தோம்

மினாப் நகரின் 160 சிறுமிகள்
பள்ளியிருந்து வீடு திரும்ப
நோட்டுப் புத்தகங்களை
எடுத்துவைத்துக்கொண்டிருந்தபோது
ஆகாயத்திலிருந்து
இரண்டு பிசாசுகளின்
சிரிப்பு பெரும் தீப்பிழம்புடன் கேட்டது
பிறகு அவர்கள் உடனடியாக
இந்த உலகிலிருந்து வெளியேற
நிர்பந்திக்கப்பட்டார்கள்

பற்றி எரியும் எண்ணெய்க் கிணறுகளில்
குழந்தைகளின் குருதி
நிரம்பிக்கொண்டிருக்கிறது

மினாப் நகரின்
160 சிறுமிகள் சமாதானத்திற்கான
160 வெள்ளைக் கொடிகளாக
துயில் கொண்டிருக்கிறார்கள்

ஆகாயத்தில் நிலவுகள்
160 துண்டுகளாக உடைந்திருக்கின்றன
எப்ஸ்டீன் கோப்புகளின் கருமேங்கள்
நட்சத்திரங்களை மூடியிருக்கின்றன

சிறிய சவப்பெட்டிகளைச் சுமந்து
நடக்க நடக்க
அவை மலைகளைப்போல
தோளில் வளர்ந்துகொண்டே இருக்கின்றன
நாம் ஒருபோதும்
இறக்கிவைக்க முடியாத
சுமைகள் அவை

மினாப் நகரின்
160 சிறுமிகளுக்காக
நீதி கேட்கும் ஊர்வலங்கள்
சென்றுகொண்டிருக்கின்றன

நாம் இன்னும் எவ்வளவு துரம் நடந்தால்
இந்த கொடூரமான பூமியின்
விளிம்பு வரும்?
மனுஷ்யபுத்திரன்

இப்போதே பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *