
திருச்சியில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது இந்த நிலையில் தொகுதி உடன்பாடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர் தேர்வு என அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், திருச்சியில் உள்ள பஞ்சப்பூரில் இன்று (மார்ச் 11) மாலை நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
கேரளாவில் இருந்து திருச்சி வருகை தரும் வரும் பிரதமர் மோடி சாலை மார்க்கமாக பஞ்சப்பூர் செல்லும் பிரதமர் மோடி, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் 3,680 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கும் நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பு திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதன்பின் பிரதான் மந்திரி கிராம சாலை யோஜனா திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 370 கிலோ மீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள 89 கிராமப்புற சாலைகளை தொடங்கி வைக்கிறார். அத்துடன் கங்கைகொண்ட சோழபுரம் அருகே அமையவுள்ள பசுமை வழிப் புறவழிச்சாலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
அதனைத் தொடர்ந்து 2 அம்ரீத் பாரத் விரைவு ரயில் உள்பட 6 ரயில்களை கொடியசைத்து பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். அதன் பின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறும் திடலுக்கு சென்று சிறப்புரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு திருச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக தமிழ்நாட்டிற்கு மோடி இன்று வருகை தருவது குறிப்பிடத்தக்கது.



