
சென்னை மெட்ரோ ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென பயணம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23- ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், கட்சித் தலைவர்கள் மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தஞ்சாவூரில் இன்று(ஏப்ரல் 10) பிரச்சாரம் செய்கிறார். திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிக்கிறார்.
இந்நிலையில்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென இன்று காலை பயணம் மேற்கொண்டார். அப்போது ரயிலில் பயணம் செய்த பயணிகளுடன் அவர் கலந்துரையாடினார். பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது குறித்த பொதுமக்களின் கருத்துகளையும் அவர் கேட்டறிந்தார். சென்னை சென்ட்ரலில் இருந்து தேனாம்பேட்டை வரை மெட்ரோ ரயிலில் பயணிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். பின்னர் மெட்ரோ வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பயணிகள் கலந்துரையாடி செல்ஃபி எடுத்துக் கொண்டனர்..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெட்ரோ ரயிலில் திடீரென பயணம் மேற்கொண்டதால் பரபரப்பு நிலவியது.



